இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு:

இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே தற்போது அமுலிலுள்ள தற்காலிக போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய மற்றும் லெபனான் நாட்டுத் தூதர்களுடன் ஜனாதிபதி ட்ரம்ப் நடத்திய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன என்றும், லெபனான் தன்னை ஹெஸ்புல்லா அமைப்பிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள அமெரிக்கா உதவும் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், “காலம் ஈரானுக்குச் சாதகமாக இல்லை” என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் தற்போதே ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்ள முடியும் என்றாலும், அது ஒரு நிரந்தரமான மற்றும் வலுவான ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாம் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையைத் (Naval Blockade) தொடர்ந்து முன்னெடுத்து வரும் வாஷிங்டன் நிர்வாகம், ஹெஸ்புல்லாவிற்கான ஆதரவை ஈரான் முற்றாகக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மறுபுறம், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்கக் கடற்படையினர் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர இராணுவத்தினர் சில வணிகக் கப்பல்களைச் சோதனையிடும் காணொளிகளை வெளியிட்டுள்ளனர். ஈரானியத் தலைமைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டைத் நிராகரித்துள்ள ஈரானிய அதிகாரிகள், நாடு ‘ஒரே ஆன்மாவாக’ ஒற்றுமையுடன் இருப்பதாகவும், தலைமைத்துவம் ஒருமித்த கருத்துடன் செயற்படுவதாகவும் பதிலடி கொடுத்துள்ளனர்.

The post இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு: appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply