வாகனச் சாரதிப் பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள், கட்டாயமாக முறையான பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என இலங்கை காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
வாகனச் சாரதிப் பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள், கட்டாயமாக முறையான பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என இலங்கை காவல்துறை கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறான அங்கீகாரம் இன்றி பயிற்சிகளை நடத்தும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும், பிரதி காவல்துறை மா அதிபருமான டபிள்யூ. பி. ஜே. சேனதீர ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், பல சாரதிப் பயிற்சி நிலையங்கள் முறையான பயிற்சி உரிமங்களைக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் போதிய சான்றிதழ் இல்லாத நபர்களே பெரும்பாலும் பயிற்சிகளை நடத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
“யாரேனும் சாரதிப் பயிற்சிகளை வழங்கினால், அவர் கட்டாயமாக சாரதிப் பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் உறுதியாக தெரிவித்தார்.
முறையற்ற பயிற்சிகளைப் பெற்று உரிமம் பெறும் இளைஞர்களே அதிகளவில் வீதி விபத்துகளில் ஈடுபடுவதாகவும், இளைஞர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகளைக் கொண்டிருப்பதும், வீதி அடையாளங்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றத் தவறுவதும் விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், சாரதிப் பயிற்சி உரிமம் வழங்கும் முறைமை தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்தார்.
