இஸ்ரேல் படைகள் தென் லெபனானில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 900 ஆண்டுகள் பழமையான “பியூஃபோர்ட் கோட்டை” (Beaufort Castle) மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள முக்கிய மூலோபாய மலைத் தொடரைப் பிடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முன்னேற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் முயற்சியால் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், தென் லெபனான் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல்–ஹெஸ்புல்லா மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களாக வடக்கு இஸ்ரேல் நோக்கி ஹெஸ்புல்லா மேற்கொண்ட கடுமையான ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பியூஃபோர்ட் கோட்டை தென் லெபனானை முழுமையாக கண்காணிக்கக்கூடிய உயரமான இடத்தில் அமைந்துள்ளதால், அது இராணுவ ரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 1982 முதல் 2000 வரை தென் லெபனானை ஆக்கிரமித்திருந்த காலத்திலும் இஸ்ரேல் இந்த கோட்டையை இராணுவ தளமாக பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லெபனான் அரசும் பல சர்வதேச நாடுகளும், குறிப்பாக பிரான்ஸ், இஸ்ரேலின் நடவடிக்கையை லெபனானின் இறையாண்மையை மீறும் செயல் எனக் கண்டித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் இந்த விவகாரம் அவசரமாக எடுத்துரைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
