அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது:
“அரசு ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக விவசாய அமைச்சகத்திலிருந்து ஒரு முன்மொழிவு வந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு சலுகை விலையில் 20 கிலோ அரிசி வழங்கப்படும். அதில் 10 கிலோ நாட்டு அரிசியும், 10 கிலோ கைக்குத்தல் அரிசியும் இடம்பெறும். தவணை முறையில் பணம் செலுத்தும் வகையில் வவுச்சர் வழங்கப்படும். அந்த வவுச்சரை பயன்படுத்தி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரிசியை பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் கொள்முதல் செய்யும் நெல்லை அரிசியாக மாற்றும் திட்டமும் தயாராக உள்ளது.”
இந்தக் கருத்தை அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (26) விஜயபுர பகுதியில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
