சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மா ப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். நீண்ட காலமாகத் தனது குடும்பத்துடன் சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக விடுமுறையைக் கழிப்பதற்காகச் சண்டிலிப்பாயில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து தங்கியிருந்துள்ளார்.
கடந்த மே 14ஆம் திகதிக்கு பின்னர் இவருடன் சுவிஸில் இருக்கும் குடும்பத்தினரால் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், நேற்று முன்தினம் சனிக்கிழமை இது குறித்து மானிப்பாய் காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு விரைந்த காவற்துறையினர், வீட்டிலிருந்து கடுமையான தூர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சடலத்தை மீட்ட காவற்துறையினர், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கொலையாளிகள் வீட்டினுள் புகுவதற்கு முன்னர் அங்கிருந்த கண்காணிப்புக் கமராரக்களை (CCTV) சேதப்படுத்தியுள்ளனர். எனினும், கமராரக்கள் சேதமாக்கப்படுவதற்கு முன்னரான பதிவுகளைக் காவற்துறையினர் ஆய்வு செய்தபோது, கடந்த 14ஆம் திகதி இரவு வேளையில் முகமூடி அணிந்த இருவர் சமையலறை வழியாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் கண்காணிப்புக் கமராரக்களை முழுமையாகச் செயலிழக்கச் செய்த பின்னரே முதியவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். உயிரிழந்த முதியவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்ட மற்றும் வெட்டப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முதியவரைக் கொலை செய்த பின்னர், வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை வெளிநாட்டு, உள்நாட்டுப் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இக்கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொலையாளிகளைக் கைது செய்வதற்காக மானிப்பாய் காவற்துறையினரின் வழிகாட்டுதலில், விசேட காவற்துறைப் பிரிவினர் களமிறக்கப்பட்டுத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post யாழ்ப்பாணத்தில் சுவிஸ் வாழ் முதியவர் கொடூரக் கொலை: முகமூடிக் கொள்ளையர்களின் வெறிச்செயல்! appeared first on Global Tamil News.
