2026 மே 31 அன்று கொலம்பியா மக்கள் தங்களது நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கத் தொடங்கினர். நான்கு ஆண்டுகளுக்கு முன் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பின்னர், நாட்டின் இடதுசாரி அரசியல் இயக்கம் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக, ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரித்துள்ள சூழலில், பாதுகாப்பை முக்கிய தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து அமெரிக்க ஆதரவு பெற்ற வலதுசாரி எதிர்க்கட்சிக் கூட்டணிகளும் களமிறங்கியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி Gustavo Petro அரசியலமைப்புச் சட்டத்தின் படி இரண்டாவது முறையாக போட்டியிட முடியாததால், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்படும் Ivan Cepeda வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
2016ஆம் ஆண்டு FARC கெரில்லாக்களுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னரும், கொலம்பியா நாடு இன்னும் கடுமையான வன்முறைகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற மோதல்களில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். பல சமூகத் தலைவர்களும் ஜனாதிபதி வேட்பாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களால் பொதுமக்களும், பழங்குடியினர் தலைவர்களும் உயிரிழந்துள்ளனர்.
தேர்தலில் முன்னணியில் உள்ள இடதுசாரி மற்றும் வலதுசாரி வேட்பாளர்கள், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு ஆயுத மோதலை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து தேர்தல் மேடைகளில் கடுமையாக விவாதித்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, ELN கெரில்லாக்கள், FARC-இன் புதிய பிரிவுகள், முன்னாள் துணை இராணுவக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தாலும், அவை தீர்வின்றி முடிவடைந்தன.
கொலம்பியாவின் முதல் இடதுசாரி ஜனாதிபதியான குஸ்டாவோ பெட்ரோ மீண்டும் போட்டியிட முடியாதபோதிலும், வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, அவரது ஆதரவாளரின் தேர்தல் பிரச்சாரம் பெட்ரோவை மையமாகக் கொண்டு நகர்கிறது என போகோட்டாவில் உள்ள Rosario University அரசியல் அறிவியல் பேராசிரியர் Yann Basset AFP-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக அதிக சமத்துவமின்மை கொண்ட நாடுகளில் ஒன்றாகவும், உலகின் முக்கிய கொகெய்ன் உற்பத்தி நாடாகவும் உள்ள கொலம்பியாவில், பெட்ரோ வறுமையையும் வேலைவாய்ப்பின்மையையும் குறைத்ததுடன், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்தியதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். ஆனால் பாதுகாப்புக் கொள்கைகளில் உள்ள பலவீனங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, பெட்ரோவின் ஆட்சிக் காலத்தில் சுமார் 800,000 கொலம்பியர்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டில் 11.5% ஆக இருந்த வறுமை விகிதம் 2025ஆம் ஆண்டில் 9.9% ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2026ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 23% உயர்த்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதமும் 10.3% இலிருந்து 9.2% ஆகக் குறைந்துள்ளது. பணவீக்கமும் 2023இல் 11.8% ஆக இருந்த நிலையில், 2025இல் சுமார் 5% ஆகக் குறைந்துள்ளது.
ஆயினும், ஒப்பந்தமின்றி வேலை செய்யும் கோடிக்கணக்கான கொலம்பியர்கள் இன்னும் சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் அல்லது வேலை இழப்பு நிவாரணம் இல்லாமல் பணியாற்றி வருவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. தெரு விற்பனையாளர்கள், பதிவு செய்யப்படாத வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் தெரு மறுசுழற்சி தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய உயர்வின் பலனை முழுமையாக பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக் கணிப்புகளில் முன்னிலையில் உள்ள 63 வயதான இடதுசாரி செனட்டரான இவான் செபெடா, தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமாவார். சமூக சீர்திருத்தங்களைத் தொடர்வதற்கும், தோல்வியடைந்த சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு, இவான் செபெடாவின் தந்தை அரசுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவயதிலேயே அவர் நாடு கடத்தப்பட்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது தந்தை ஒரு கம்யூனிஸ்ட் அரசியல்வாதி ஆவார். இவான் செபெடா ஆயுத மோதல்களின் பாதிக்கப்பட்டவர்கள், பழங்குடியினர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர் சமூகங்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
கொலம்பிய துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் சர்வதேச அளவில் அறியப்பட்ட பழங்குடியினத் தலைவரான Aida Quilcué, இவான் செபெடாவுக்கு ஆதரவு அளித்துள்ளார். அவரது கணவர் கொல்லப்பட்ட பின்னர் மனித உரிமை செயற்பாட்டாளராக உருவெடுத்த அவர், பழங்குடியினர் ஆதரவை இவான் செபெடாவுக்கு பெற்றுத்தர முக்கிய பங்காற்றியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால், ஐடா கில்குவே கொலம்பியாவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்கலாம்.
“வறுமையை நிரந்தரமாக ஒழிப்பதும், சமூக சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதும் எங்கள் இரண்டாவது அரசின் முக்கிய இலக்காக இருக்கும்,” என்று இவான் செபெடா தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக நிற்பவர் “டைகர்” என அழைக்கப்படும் 47 வயதான கோடீஸ்வர வழக்கறிஞர் Abelardo de la Espriella ஆவார். அவர் Donald Trump ஆதரவு வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படுகிறார். போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் ELN கெரில்லாக்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கும் அவர், பத்து மிகப்பெரிய சிறைச்சாலைகளை அமைப்பதையும், பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை 40% குறைப்பதையும், போதைப்பொருள் கும்பல்களின் தளங்கள் மீது குண்டுவீச்சு நடத்துவதையும் முன்மொழிகிறார்.
கருத்துக் கணிப்புகளின்படி, இவான் செபெடாவும் அபெலார்டோ டெ லா எஸ்ப்ரியெல்லாவும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறக்கூடிய இரண்டாம் சுற்றுத் தேர்தலில் நேருக்கு நேர் மோதக்கூடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி Álvaro Uribe ஆதரவு பெற்ற செனட்டரான Paloma Valencia என்பவரும் வலதுசாரி போட்டியாளர்களில் முக்கிய இடம் வகிக்கிறார்.
“நீண்டகால உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள கொலம்பியா மக்கள் எதிர்பார்ப்பது அமைதி, சுதந்திரம் மற்றும் பாதுகாப்புதான்,” என பேராசிரியர் யான் பாசெட் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வன்முறைச் சூழல் இருந்தபோதிலும், தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மக்களுக்கு உறுதியளிக்க National Electoral Council of Colombia முயற்சி செய்து வருகிறது. வாக்களிப்பு அமைதியாக நடைபெறுவதற்காக, குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள ஆயுதக் குழுக்கள் தேர்தலுக்கு முன் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவிக்குமாறு அவற்றிடம் கோரப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகள் மூடப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஆரம்ப முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த வேட்பாளரும் தேவையான பெரும்பான்மையைப் பெறாவிட்டால், இரண்டாவது சுற்றுத் தேர்தல் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
