44
யாழ்ப்பாணம் தீவகப் பிரதேசங்களான நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய பகுதி மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான விசேட கலந்துரையாடல் வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன் மற்றும் காவற்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரிகளின் அறிவிப்புகள் பின்வருமாறு:
தீவகப் பாடசாலைகளில் நிலவும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். குறிப்பாக, ‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். புதிய ஆசிரியர் நியமனங்களில் இப்பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
நெடுந்தீவு மக்களின் பிரதான போக்குவரத்தாக விளங்கும் ‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ ஆகிய இரு பயணிகள் படகுகளும் தற்போது காங்கேசன்துறை கடற்படை இறங்கு துறையில் கடற்படையினரால் திருத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்து வரும் பெப்ரவரி அல்லது அதற்கு அடுத்த மாத நடுப்பகுதியில் இப்படகுகள் மீண்டும் சேவைக்குத் தயாராகும் என வட பிராந்தியக் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். அதுவரையில், மக்களின் தடையற்ற போக்குவரத்துக்காக வாடகைப் படகொன்றை அமர்த்துவதற்கான தரநிர்ணயப் பரிசோதனைகள் நெடுந்தீவு பிரதேச செயலாளரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திருத்தப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு விசேட முன்னுரிமை அட்டை (Priority Card) வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், அனலைதீவுக்கான அம்புலன்ஸ் படகு வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நெடுந்தீவு மருத்துவமனை நிர்வாகத்தை மேம்படுத்த 10 பொதுமக்களை உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவில் மாதம் ஒருமுறை மருத்துவ நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளவும், மருத்துவர்களை அடிக்கடி இடமாற்றம் செய்யாமல் இருக்கவும் ஆளுநர் சாதகமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தீவகத்தின் சில இறங்குதுறைகளில் பொது மலசலகூட வசதிகள் இன்றி நோயாளர்களும் பொதுமக்களும் அவதியுறுவது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர், வரும் 2027ஆம் ஆண்டுக்குள் தேவையான இடங்களில் தனியார் அல்லது பொது மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி விசேட நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ‘சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்’ எனும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
அண்மையில், வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஆளுநர் தடை விதித்துள்ளதாகத் தென்பகுதியிலுள்ள சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் போலியான செய்தி (Fake News) என்றும், சமூகங்களுக்கிடையே குரோதத்தை உருவாக்கும் தீய நோக்கோடு இத்தகைய பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு செய்திகளின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
